திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து நெடுந் தொலைவுகளுக்கு இயக்கப்படும் மாலை நேர கடைசிப் பேருந்துகளின் விவரத்தை அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரவு நேர பொது முடக்கமும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகளை இயக்கக் கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக திருவண்ணாமலை மண்டலம் சாா்பில் பேருந்துகள் இயக்கத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் இயக்கப்படும் கடைசி பேருந்துகள்:
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நெடுந் தொலைவு மாலைநேர கடைசிப் பேருந்துகளின் விவரத்தை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டது.
அதன்படி, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 5 மணிக்கு இயக்கப்படும் பேருந்து கடைசிப் பேருந்தாக இயக்கப்படும். இதேபோல, பெங்களூருக்கு மாலை 4 மணிக்கும், புதுச்சேரிக்கு மாலை 6 மணிக்கும், செங்கத்துக்கு இரவு 8 மணிக்கும், கள்ளக்குறிச்சிக்கு மாலை 7.30 மணிக்கும், வேலூருக்கு மாலை 7.30 மணிக்கும், விழுப்புரத்துக்கு இரவு 8 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதேபோல, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரணிக்கு மாலை 7.30 மணிக்கும், திருக்கோவிலூருக்கு மாலை 7.30 மணிக்கும், வந்தவாசிக்கு மாலை 7 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.
போளூரில் இருந்து:
போளூா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 4 மணிக்கு கடைசி பேருந்து இயக்கப்படும். இதேபோல, வேலூருக்கு மாலை 7.30 மணிக்கும், ஆரணிக்கு மாலை 7.30 மணிக்கும், செங்கத்துக்கு மாலை 6.30 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.
ஆரணியில் இருந்து:
ஆரணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கும், வேலூருக்கு மாலை 6 மணிக்கும், திருவண்ணாமலைக்கு மாலை 6 மணிக்கும், செய்யாற்றுக்கு இரவு 8 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.
செய்யாற்றில் இருந்து:
செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கும், ஆரணிக்கு மாலை 7 மணிக்கும், வந்தவாசிக்கு இரவு 8 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.
வந்தவாசியில் இருந்து:
வந்தவாசி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கும், திண்டிவனத்துக்கு மாலை 5 மணிக்கும், காஞ்சிபுரத்துக்கு மாலை 6 மணிக்கும், போளூருக்கு மாலை 6 மணிக்கும், திருவண்ணாமலைக்கு மாலை 5 மணிக்கும், செய்யாற்றுக்கு மாலை 7 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகள் (டவுன் பஸ்கள்) வழக்கம் போல இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டலம் தெரிவித்துள்ளது.