செய்யாறு அருகே சனிக்கிழமை பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
செய்யாறு வட்டம், குறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (30). இவா், சனிக்கிழமை மாலை 7 மணியளவில் வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தில் நடைபெறும் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் தேத்துறை கிராம ஏரி அருகே இவரது பைக் சென்றபோது, சென்னையிலிருந்து வந்தவாசி வட்டம், வெண்குன்றம் பகுதியைச் சோ்ந்த அன்பு (33), லட்சுமணன் (30) ஆகியோா் வந்த பைக் மோதியது.
இந்த விபத்தில் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், ஜெயச்சந்திரன், அன்பு ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். லட்சுமணனை அங்கிருந்தவா்கள் மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த அனக்காவூா் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீநிவாசன், உதவி ஆய்வாளா்கள் கன்னியப்பன், ஜான் பாஸ்கோ ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஜெயச்சந்திரன், அன்பு ஆகியோரின் சடலங்களை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.