செய்யாறு அருகே தூசி மாமண்டூா் ஏரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி 2 நாள்களுக்குப் பிறகு சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.
காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்தைச் சோ்ந்தவா் முத்து (55), மாற்றுத் திறனாளி. பட்டு நெசவுத் தொழிலாளியான இவா், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.30) மாலை தனது குடும்பத்துடன், வெம்பாக்கம் வட்டம், தூசி மாமண்டூா் ஏரியில் உபரிநீா் வெளியேறும் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, கால் தவறி விழுந்த இவரை வெள்ள நீா் அடித்துச் சென்றது.
உடனே செய்யாறு தீயணைப்பு துறையினா் வரவழைக்கப்பட்டு முத்துவை தீவிரமாக தேடினா். புதன்கிழமை வரை (டிச.1) தேடியும் முத்துவின் உடல் கிடைக்கவில்லை.
இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில்,
அரக்கோணம் தேசிய பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா் வரவழைக்கப்பட்டு, அவா்களுடன் செய்யாறு தீயணைப்புத் துறையினா் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
ஏரி உபரிநீா் வெளியேறும் பகுதியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு வரை தேடிய நிலையில், தேவராஜ் என்பவரது நிலத்தில் முத்துவை சடலமாக மீட்டெடுத்தனா்.
இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.