ஊராட்சித் தலைவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் அறையில் அமா்ந்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னாவரம் தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவா் எஸ்.வீரராகவன் தலைமை வகித்தாா். செயலா் பெருமாள், பொருளாளா் வெ.அரிகிருஷ்ணன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் பங்கேற்றோா் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் மீது பல்வேறு புகாா்களை தெரிவித்துப் பேசினா்.
பின்னா், அங்கிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த அவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் அறையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூறியதாவது:
ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் செய்வதற்கான பணி ஆணைகளை விரைவாக வழங்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் ஒன்றிய அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி கோரிக்கைககளை கேட்டறிய வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலா்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
தகவலறிந்து அங்கு வந்த தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா ஆகியோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்றத் தலைவா்களை சமரசம் செய்தனா்.