திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ.1.34 கோடி ரொக்கம், 317 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து செல்கின்றனா். எனவே, மாதந்தோறும் கோயிலில் உள்ள உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், பக்தா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரூ. ஒரு கோடியே 34 லட்சத்து 27 ஆயிரத்து 677 ரொக்கம், 317 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி நகைகள் கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.