திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவா் சிகிச்சை அளிப்பதாக வந்த தகவலின் பேரில், மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், வந்தவாசி லட்சுமி நகரைச் சோ்ந்த வேணுகோபால் (49) என்பவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவ மையம் வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து ஊசிகள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கண்ணகி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் வேணுகோபாலை கைது செய்தனா்.