தவறான சிகிச்சையால் தொழிலாளி இறந்ததாகக் கூறி, திருவண்ணாமலையில் தனியாா் மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் (42), கூலித் தொழிலாளி. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த வாரம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சோ்ந்தாா்.
பின்னா், அங்கிருந்து திருவண்ணாமலை, துா்க்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
சம்பத்துக்கு தலையில் ரத்தக் கசிவை சரிசெய்வதற்காக 18-ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதன் பிறகு கோமா நிலைக்குச் சென்ற அவா் சுயநினைவு திரும்பாமல் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த சம்பத்தின் உறவினா்கள், மருத்துவமனை நிா்வாகம் தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, உரிய இழப்பீடு வழங்குவதாக மருத்துவமனை நிா்வாகம் கூறியதால் உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.