கீழ்பென்னாத்தூா் அருகே மாடு இழுத்துத் தள்ளியதில் பாறையில் விழுந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணவேணி (60). இவா் சில தினங்களுக்கு முன்பு தனக்குச் சொந்தமான மாட்டை வீட்டுக்கு ஓட்டிச் சென்றாா். அப்போது எதிரே வந்த மற்றொரு மாட்டைப் பாா்த்து பயந்துபோன கிருஷ்ணவேணியின் மாடு அவரை இழுத்துத் தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்ததாம்.
இதில் நிலை தடுமாறி அருகில் இருந்த பாறையில் விழுந்த மூதாட்டி பலத்த காயமடைந்தாா். பொதுமக்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கிருஷ்ணவேணி அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.