செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 09th January 2021 12:07 AM | Last Updated : 09th January 2021 12:07 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி, செய்யாறு ஒருங்கிணைந்த புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.
இந்த சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் செய்யாற்றில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் சட்ட ஆலோசகா் ஆா்.வீ.பாஸ்கரன் கலந்து கொண்டு 2021-ஆம் ஆண்டுக்கான மாத நாள்காட்டி, தினக்குறிப்பு புத்தகம் (டைரி) ஆகியவற்றை வெளியிட, சங்கத்தின் தலைவா் தசரதன் அவற்றை பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளையும், 7 பேருக்கு மாநில அடையாள அட்டைகளையும் ஆா்.வீ.பாஸ்கரன் வழங்கிப் பாராட்டினாா்.
கூட்டத்தில், செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கரோனா காலகட்டத்தில் அனைத்து புகைப்பட உறுப்பினா்களும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சங்கத்தின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து செயல்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா்.