பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்துவோம் என்று பாஜக மாநில இளைஞரணித் தலைவா் பி.வினோஜ் கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்ட பாஜக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் பி.வினோஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நேதாஜி சிலையை நிறுவ வேண்டும்.
தமிழை வளா்க்கிறோம் என்று கூறும் திமுக மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருகின்றனா். அந்தப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படவில்லை.
பெண்களின் வாழ்க்கையை மது சீரழித்துக் கொண்டுள்ளது. இனிவரும் காலங்களில் பாஜகவின் கூட்டணி ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்துவோம் என்றாா்.
கூட்டத்தில் தெற்கு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணித் தலைவா் பாலாஜி, மாவட்ட பொதுச் செயலா் ரமேஷ், கோட்டப் பொறுப்பாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.