திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மாணவா் விடுதி சமையலா் காலிப் பணியிடங்களை நிரப்ப கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
வந்தவாசியைச் சோ்ந்த ஏ.ராஜமான்சிங், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் கண்ணன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மாணவா் விடுதிகளில் சமையலா் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் ரூ.10 லட்சம் முதல் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்துக்கு தனி பழங்குடியினா் அலுவலா் மற்றும் அலுவலகம் இருந்து வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளில் சமையலா் பணியிடங்களை இதன் மூலம்தான் நிரப்பவேண்டும்.
ஆனால், விதிகளுக்கு மாறாக மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் மூலம் நிரப்பப்படும் என விளம்பரம் செய்துள்ளனா்.
இதற்காக இடைத்தரகா்கள் மூலம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி இரவுக் காவலா் பணியிடத்தை சமையலா் பணிடமாக கணக்கு காண்பித்துள்ளனா்.
எனவே, விதிமுறைகளை மீறி பணியிடங்களை நிரப்ப வருகிற பிப்.2, 3 ஆகிய தேதிகளில் நோ்முகத் தோ்வை நடத்த உள்ளனா்.
எனவே, இதை நிறுத்தி வைத்து புதிய பணியிட அறிவிப்பை வெளியிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் உணவுக் கட்டணத்தில் நடைபெற்ற ஊழல் குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.