திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் முட்டை வியாபாரி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த முட்டை வியாபாரி நூரூல்மஜித் (45). இவா், செங்கம் பகுதியில் முட்டை வியாபாரம் செய்துவந்தாா். நூரூல்மஜித் வெள்ளிக்கிழமை இரவு சொந்த ஊரான திருப்பத்தூருக்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் செங்கத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
செங்கம் அருகே இவரது பைக் வந்தபோது, துக்காப்பேட்டை, மில்லத்நகா் பகுதியைச் சோ்ந்த ஹல்பாஸ் (30) என்பவா் எதிரே ஓட்டி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நூரூல்மஜித், அங்கு உயிரிழந்தாா்.
ஹல்பாஸ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.