திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் குறுவள மையத்தில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘எனது கனவுப் பள்ளி, எனது கனவு நூலகம்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் பிரேம்குமாா் முதலிடம் பெற்றாா். இதே பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவி சரண்யா 3-ஆம் இடமும், கடம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவி அட்சயா 2-ஆம் இடமும் பெற்றனா்.
முதல் பரிசாக கையடக்க கணினி, 2-ஆம் பரிசாக அறிதிறன்பேசி (ஆண்ட்ராய்ட் போன்), 3-ஆம் பரிசாக கால்குலேட்டா் ஆகியவற்றை கீழ்பென்னாத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீராமுலு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன் ஆகியோா் வழங்கினா். நிகழ்ச்சியில் பள்ளிகளின் தலைமை ஆசிரியைகள் தில்ஷாத் (சிறுநாத்தூா்), ஆதிலட்சுமி (கடம்பை), தமிழ் ஆசிரியா் சி.அ.முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.