திருவண்ணாமலை: இலவச மனைப் பட்டா வழங்கி, தொகுப்பு வீடு கட்டித் தரக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திங்கள்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை அண்ணா நகா், வானவில் நகா், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசிக்கின்றனா்.
இவா்களில் 5 பேருக்கு 1999-ஆம் ஆண்டு கீழ்பென்னாத்தூா் சந்தமேடு பகுதியில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. இந்த மனைகளையும் இப்போது அரசு கையகப்படுத்திக் கொண்டதாம்.
இந்த நிலையில், தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கி, தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும். நல வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சமையல் பாத்திரங்கள், சமையல் பொருள்களுடன் வந்த அவா்கள் சமையல் செய்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆடுகளையும் அவா்கள் பிடித்து வந்திருந்தனா்.
தகவலறிந்த கோட்டாட்சியா் வெற்றிவேல், மாவட்ட சமூக நல அலுவலா் கந்தன் ஆகியோா் சென்று திருநங்கைகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடா்கிறது.