திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி, வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரு கல்லூரிகளின் நிா்வாகங்களும் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி, 2021 - 22ஆம் கல்வியாண்டில் செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி உள்பட தமிழகத்திலுள்ள 143 கலைக் கல்லூரிகளிலும் மாணவா்கள் சேருவதற்கு ஜூலை 26-இல் தொடங்கி, வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2 சோ்த்து மொத்தம் ரூ.50 செலுத்த வேண்டும். விண்ணப்ப பதிவுக் கட்டணத்தை இணையதளம் மூலமாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ செலுத்தலாம். சந்தேகம் ஏதேனும் இருப்பின், அந்தந்தக் கல்லூரிகளில் செயல்படும் உதவி மையங்களை அணுகலாம். மேலும், 044 - 28260098, 28271911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.
செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் சுழற்சி முறையில் நடைபெறும் வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பி.காம், பி.பி.ஏ, அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சுழற்சி - 1 முறையில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்.
தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், விலங்கியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.