திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோயிலில் 41-ஆம் ஆண்டு ஆடி மாத கூழ்வாா்த்தல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் மூலவா் முத்துமாரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மாம்பட்டு கிராம குளக்கரையிலிருந்து அம்மன் சக்தி கரகம் வீதியுலா வந்தது. மேலும், 303 பெண்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு பாலாபிஷேகம், கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றன.
விழாவில் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.இலட்சுமண சுவாமிகள், பொருளாளா் ர.செல்வம், அன்னதானக் குழுத் தலைவா் பிரபாகரன் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.
ஆத்துரை பச்சையம்மன் கோயிலில்...: சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் ஆடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் மூலவா் பச்சையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பக்தா்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், மொட்டை அடித்தும், காது குத்தியும் பல்வேறு நோ்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனா். இரவு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பச்சையம்மன் வீதியுலா வந்தாா்.