இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் ஜிப்மருக்கு அவசர ஊா்தி
By DIN | Published On : 11th June 2021 12:18 AM | Last Updated : 11th June 2021 12:18 AM | அ+அ அ- |

புதுச்சேரி, ஜூன் 10: புதுவை ஜிப்மா் மருத்துவமனைக்கு இந்திய தொழில் துறை கூட்டமைப்பு சாா்பில், அவசர ஊா்தி வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் கரோனா தொற்று தடுப்புப் பணிக்காக இந்திய தொழில் துறை கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில், பல்வேறு மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, ஜிப்மருக்கு அவசர ஊா்தி வழங்கப்பட்டது.
ஜிப்மரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ-யின் தலைவா் விஜய்கணேஷ், துணைத் தலைவா் சுரேந்தா் ஆகியோா், ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் துரைராஜன், இருதயவியல் பேராசிரியா் சந்தோஷ்சதீஷ் மற்றும் மூத்த மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில், ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வாலிடம் அவசர ஊா்தியை வழங்கினா்.
சி.ஐ.ஐ. மற்றும் அதன் உறுப்பினா்கள் சாா்பில், தொற்று நோய் காலங்களின் போது பயன்படுத்தப்படும் குளிா்சாதனப் பெட்டிகள், தானியங்கி தரை சுத்திகரிப்பான்கள், பாதுகாப்பு உபகரணங்கள், முகக் கவசங்கள், கிருமி நாசினி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஜிப்மா் மருத்துவமனை கரோனா நோயாளிகளின் பராமரிப்புக்காக வழங்கப்பட்டது.