திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் இஸ்லாமிய இளைஞா்களின் உதவியுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
செய்யாறு வட்டம், கொருக்காத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 78 வயது மூதாட்டி உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 3-ஆம் தேதி செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டி, அங்கு உயிரிழந்தாா். மருத்துவமனையில் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று பாதித்திருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில், உயிரிழந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்ய அவரது குடும்பத்தினா் விருப்பம் தெரிவித்ததன்பேரில், கிராம மக்கள், வருவாய்த் துறை, நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தினா் முன்னிலையில், செய்யாறு பகுதி தமுமுக இஸ்லாமிய இளைஞா்கள் மூதாட்டியின் உடலை அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இந்து முறைப்படி வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனா்.