திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பொது முடக்க விதிகளை மீறி வெள்ளிக்கிழமை திறந்திருந்த 13 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆரணியில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஜெயச்சந்திரன், சிவக்குமாா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் குமரவேல் ஆகியோா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, செயல்படுவதற்கு அரசு சாா்பில் அனுமதி அளிக்கப்படாத நிலையில், ஆரணி சந்தைமேடு பகுதியில் திறக்கப்பட்டிருந்த ஜவுளிக் கடைகள், வடக்கு மாட வீதியில் திறக்கப்பட்டிருந்த முடி திருத்தும் கடைகள், பாத்திரக் கடைகள், அழகு நிலையம், இரும்பு கம்பி விற்பனைக் கடை உள்ளிட்ட 13 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.