வந்தவாசி அருகே மதுக் கடையை அகற்றக் கோரி பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசி-விளாங்காடு சாலையில் பாதிரி ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது.
கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த மதுக் கடை தமிழக அரசு உத்தரவின் பேரில் திங்கள்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை அந்தக் கடையை முற்றுகையிட்ட பாதிரி கிராம பெண்கள், கடையை உடனடியாக மூடக் கோரியும், கடையை அந்த பகுதியிலிருந்து நிரந்தரமாக அகற்றக் கோரியும் சாலை மறியல் செய்தனா். அப்போது மதுக் கடையை மூடக் கோரும் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினா்.
தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி வட்டாட்சியா் திருநாவுக்கரசு, டிஎஸ்பி பி.தங்கராமன் உள்ளிட்டோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.