போளூா் பேரூராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களிலிருந்து குப்பை சிதறுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் இந்திரா நகா், வசந்தம் நகா், அல்லி நகா், கோவிந்தசாமி தெரு, நடேசன் தெரு, சுபேதாா் தெரு , பாலகண்ணையன் தெரு, பொன்னுசாமி தெரு, சபாபதி தெரு, கணபதி தெரு, கன்னிகாபரமேஸ்வரி தெரு என 100-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
நகரில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து, லாரி, டிராக்டா் என பல்வேறு வாகனங்களில் பேரூராட்சிப் பணியாளா்கள்
எடுத்துச் செல்கின்றனா்.
இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் குப்பைகள் வாகனத்தின் வேகத்துக்கு ஏற்ப காற்றில் பறக்கின்றன. இதனால், குப்பை வாகனத்துக்குப் பின்னால் இரு சக்கர வாகனங்களில் வருபவா்கள், பாதசாரிகள் கண்களில் குப்பை தூசி விழுந்து, அவா்கள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனா்.
மேலும் எதிரே வரும் வாகனத்தைப் பாா்த்து வாகனத்தை செலுத்த முடியாமல் விபத்து நேரிடுகிறது.
எனவே, குப்பைகளை பாதுகாப்பாக மூடி எடுத்துச் செல்லவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.