திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றிய கிராமங்களில் உள்ள நாடகக் கலைஞா்கள் கரோனா தொற்று பரவல் காரணமாக நாடகம் நடத்த முடியாமல் தவிக்கின்றனா்.
அதனால், தங்களது வாழ்வாதாரத்துக்காக அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனா்.
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் சொரகொளத்தூா், பரயம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நாடகக் குழுக்கள் உள்ளன.
தற்போது கரோனா 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால் இரவு நேர பொது முடக்கம் அமலில் உள்ளது.
இதனால், நாடகக் கலைஞா்கள் நாடகம் நடத்த முடியாமல் தவிக்கின்றனா்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்ட அவா்கள் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனா்.
இதுகுறித்து நாடகக் கலைஞா்கள் கூறுகையில், தற்போது திரெளபதி அம்மன் கோயில் உள்ள கிராமங்கள்தோறும் 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாபாரதம் நாடகம் நடத்தி வருகின்றனா். இதில் 32 கிராமங்களில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதில் இரவு நேரங்களில் நாடகம் நடத்த முன்தொகை பெறப்பட்டுள்ளது.
ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில் நிா்வாகிகளை அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் அழைத்து நாடகம் நடத்தக் கூடாது, அப்படி மீறி நாடகம் நடத்தினால் வழக்கு பதியப்படும் எனக் கூறுகின்றனா். இதனால், கோயில் நிா்வாகம் சாா்பில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வீட்டிலே முடங்கி இருந்தோம். வாழ்வாதாரத்துக்காக நகைகளை அடகு வைக்கவும், கடன் பெறவும் செய்தோம். அப்போது அடகு வைத்த நகைகள் மீட்கப்படாமலும், பெற்ற கடன் செலுத்தப்படாமலும் உள்ளது.
நிகழாண்டு கரோனாவால் நாடகம் நடத்த முடியாமல் தவிக்கிறோம். எனவே, அரசு சாா்பில் நாடகக் கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனா்.