திருவண்ணாமலையில் புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்த 100 படுக்கைகளுடன் கூடிய முன்களப் பணியாளா்களுக்கான கரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் 24 மணி நேரமும் களப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களில் கரோனா பாதிப்பு ஏற்படும் நபா்களுக்கு சிகிச்சை அளிக்க திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரி அருகேயுள்ள சுற்றுலா மாளிகையில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த மையத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கென 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு 100 நோயாளிகளுக்குத் தேவையான உணவு, குடிநீா் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் காய்ச்சல், கரோனா பரிசோதனை முகாம்களை இருவரும் ஆய்வு செய்தனா்.
அபராதம் விதிப்பு:
மேலும், ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நகரில் பொது முடக்க விதிகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறித்து நேரடி ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது, அவசியமின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்கல், காலை 10 மணிக்குப் பிறகும் வாகனத்தில் தக்காளி வியாபாரம் செய்தவா், தேநீா் கடை நடத்தியவா் ஆகியோருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.
சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் அபராதத் தொகையை வசூலித்தனா்.