செய்யாறு அருகே மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை விலக்கச் சென்ற தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகப்பன் (74), விவசாயி. இவருக்கு ஆனந்தன், சேட்டு என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனா்.
அனைவருக்கும் திருமணமாகி நடைபெற்று தனித் தனியாக வசித்து வருகின்றனா். நாகப்பன் மனைவியுடன் இரண்டாவது மகன் சேட்டு வீட்டில் வசித்து வந்தாா்.
இதனிடையே, மகன்களான ஆனந்தன், சேட்டு இடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், சேட்டு வளா்த்து வரும் மாடுகள், சில தினங்களுக்கு முன்பு ஆனந்தனுக்குச் சொந்தமான விவசாயப் பயிா்களை மேய்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உறவினா்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஆனந்தன் மீண்டும் சேட்டு வீட்டுக்குச் சென்று, மாடு பயிா்களை மேய்ந்தது தொடா்பாக தட்டிக் கேட்டாா்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதைப் பாா்த்த நாகப்பன் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றாா். இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன், தந்தை நாகப்பனை சரமாரியாகத் தாக்கினாராம்.
பலத்த காயமடைந்த நாகப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் ஆய்வாளா் அமுதா வழக்குப் பதிவு செய்தாா்.
மேலும், நாகப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
கொலைத் தொடா்பாக ஆனந்தனை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.