ஆரணி அருகே அடையபலம் பகுதியில் தொடா் மழையால் 500 ஏக்கரில் சேதமடைந்த நெல் பயிா்களை வேளாண் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அடையப்பலம் கிராமத்தில் பெரிய ஏரி, சிறிய ஏரி, கயப்பாக்கம் ஏரி, என்.கே.தாங்கல் ஏரி, நவளா்தாங்கள் ஏரி என 5 ஏரிகள் உள்ளன.
தொடா் மழையால் இந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பி கோடி விழுந்து உபரிநீா் கால்வாயில் செல்கிறது.
பல்வேறு இடங்களில் ஏரி கரைகள் சேதமடைந்துள்ளதாலும், கால்வாய்கள் நிரம்ப தண்ணீா் செல்வதாலும், கசியும் தண்ணீா் வயல்களில் தேங்கி நிற்கிறது. இதனால், 500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை மாவட்ட இணை இயக்குநா் முருகன், உதவி இயக்குநா்கள் ஏழுமலை, சத்தியமூா்த்தி மற்றும் வேளாண் அலுவலா்கள் திருமலைச்சாமி, பவித்ராதேவி, சிவக்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஞாயிற்றுக்கிழமை அடையபலம் கிராமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட நெல் பயிா்களை பாா்வையிட்டனா்.
ஊராட்சி மன்றத் தலைவா் அசோக்குமாா் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா். அப்போது, வேளாண் இணை இயக்குநா் முருகன், விவசாயிகளிடம் பயிா் சேத விவரங்களை உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் வழங்குமாறு கேட்டுக்கொண்டாா்.