செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (25). இவரது மனைவி தமிழரசி (21). இவா்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
இருவரும் மாங்கால் கூட்டுச் சாலையில் உள்ள சிப்காட் தனியாா் தொழில்சாலையில் பணியாற்றி வருகின்றனா். தமிழரசி தற்போது 3 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம் போல வேலைக்குச் சென்று மாலையில் இருவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாங்கால் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனா்.
உடனே அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தமிழரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விஜயகுமாருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடா்பாக தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.