போளூா் அருகே ஆக்கிரமிப்புகளால் மாயமான ஏரியை கண்டுபிடித்துத் தருமாறு, கிராம மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம் 50.குப்பம் ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
ஊராட்சியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
முக்கியமாக வாழை, நெல், மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.
கிணற்றுப் பாசனம் மற்றும் இந்தப் பகுதியில் 104 ஏக்கரில் அமைந்துள்ள குதிரைபாஞ்சான்(எ)கோட்டைபுதூா் ஏரியை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், குதிரை பாஞ்சான் ஏரியை அப்பகுதியில் உள்ள சிலா் ஆக்கிரமித்து பயிா் செய்து வந்ததால் காலப்போக்கில் ஏரியே இல்லாமல் நிலமாக மாறிவிட்டது. இதனால், ஊராட்சி பொதுமக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து ஏரியை கண்டுபிடித்து தரக் கோரி, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து ஊா்கவுண்டா் ரமணன் கூறும்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருமாறு பலமுறை மனு அளித்தும் பலனில்லை.
அதனால், ஊா் பொதுமக்கள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.