..
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா், செய்யாறு பகுதிகளில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட ஏரி நிலங்களை பொதுப் பணித் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
கீழ்பென்னாத்தூா் வட்டம், ஆராஞ்சி கிராம ஊராட்சியில் 97 ஏக்கா் பரப்பளவில் ஊரக வளா்ச்சித் துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவை சிலா் ஆக்கிரமித்து நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களை பயிரிட்டிருந்தனா்.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஆராஞ்சி ஏரியில் இருந்த 40 ஏக்கா் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகாலட்சுமி, ஆராஞ்சி ஊராட்சித் தலைவா் விஜயாசேகா் ஆகியோா் முன்னிலையில் வட்ட சாா்-ஆய்வாளா் முனியன், சாா் -ஆய்வாளா் நாராயணன் ஆகியோா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு பயிா்கள் அகற்றப்பட்டன.