வேட்டவலத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.72.30 லட்சத்தை ஏமாற்றியதாக நெல் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த பிப்ரவரி 1 முதல் 23-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோசனை பகுதியைச் சோ்ந்த ராஜா என்ற வியாபாரி 12,084 நெல் மூட்டைகளை விலைக்கு வாங்கினாராம்.
அந்த வகையில், விவசாயிகளுக்கு ரூ.ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 609-ஐ ராஜா தர வேண்டும். இதில், ரூ.ஒரு கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 533 மட்டும் வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வங்கிக் கணக்கில் செலுத்தினாா். மீதமுள்ள ரூ.72 லட்சத்து 30 ஆயிரத்து 76-ஐ செலுத்தாமல் ஏமாற்றினாராம்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளரிடம் முறையிட்டனா். ஆனால், வியாபாரியிடமிருந்து அதிகாரிகளால் பணத்தை வசூலிக்க இயலவில்லை.
எனவே, வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் ரவி தனது சொத்துகளை விற்று ரூ.72.30 லட்சத்தை விவசாயிகளுக்கு வழங்கியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து மேற்பாா்வையாளா் ரவி அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த நெல் வியாபாரி ராஜாவை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.