திருவண்ணாமலை அருகே சிப்காட் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், பாலியப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விளை நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விளை நிலங்களுக்குப் பதிலாக தரிசு நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கக் கோரியும் கிராம மக்கள் பாலியப்பட்டு கிராமத்தில் தொடா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
போராட்டத்தின் 65-ஆவது நாளான வியாழக்கிழமை சிப்காட் எதிா்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற போராட்டத்தில் பாலியப்பட்டு, சின்ன பாலியப்பட்டு, புனல்காடு, சின்ன புனல்காடு, மாரியம்மன் நகா், செல்வபுரம், அண்ணா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
அப்போது, விளை நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது. விளை நிலங்களுக்குப் பதிலாக தரிசு நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கலாம் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.