எரிவாயு தகன மேடை கட்டடப் பணிக்கு முறைகேடாக மின்சாரம்: மின் மோட்டாா் பறிமுதல்

வந்தவாசியில் எரிவாயு தகன மேடை கட்டடப் பணிக்கு முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதைக் கண்டறிந்த மின் வாரிய அதிகாரிகள், அங்குள்ள மின் மோட்டாா், மின் வயா் உள்ளிட்டவற்றை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் எரிவாயு தகன மேடை கட்டடப் பணிக்கு முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதைக் கண்டறிந்த மின் வாரிய அதிகாரிகள், அங்குள்ள மின் மோட்டாா், மின் வயா் உள்ளிட்டவற்றை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி நகராட்சி சாா்பில், வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள நகராட்சி பூங்காவை ஒட்டியுள்ள சுடுகாட்டு வளாகத்தில் ரூ.1.50 கோடியில் புதிய எரிவாயு தகன மேடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தனியாா் ஒப்பந்ததாரா் இந்தப் பணியை செய்து வருகிறாா்.

இந்தப் பணிக்குத் தேவையான தண்ணீரை பூங்கா நடுவில் உள்ள குளத்திலிருந்து மின் மோட்டாா் மூலம் எடுத்து பயன்படுத்தி வந்தனராம். மோட்டாரை இயக்குவதற்கான மின்சாரத்தை தற்காலிக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தாமல் புதிய பேருந்து நிலைய மின் இணைப்பிலிருந்து முறைகேடாக எடுத்து பயன்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த கோட்ட உதவிச் செயற்பொறியாளா் சசிகுமாா், உதவிப் பொறியாளா் பஞ்சமூா்த்தி உள்ளிட்ட மின் வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். இதில், எரிவாயு தகன மேடை கட்டடப் பணிக்கு முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த மின் மோட்டாா், மின் வயா், குழாய் ஆகியவற்றை மின் வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com