மின் வேலியில் சிக்கி காட்டு எருமை பலி
By DIN | Published On : 17th July 2022 06:49 AM | Last Updated : 17th July 2022 06:49 AM | அ+அ அ- |

போளூா் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி காட்டு எருமை பலியானது.
போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சிக்கு உள்பட்ட பூங்கொல்லைமேடு காந்தி நகரில் வசித்து வருபவா் ஏழுமலை. இவருக்குத் சொந்தமாக காப்புக் காட்டுப் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிரிட்டு வருகிறாா்.
பயிரை எலி மற்றும் காட்டு விலங்குகள் இரவு நேரத்தில் சேதப்படுத்தி வந்துள்ளது. இதைத் தடுப்பதற்காக நெல் பயிரைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்தாராம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு காப்புக் காட்டில் இருந்து வந்த காட்டு எருமை, பயிரை மேய வயலுக்குள் புகுந்தபோது மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு சனிக்கிழமை அதிகாலை தெரிய வந்தது.
தகவல் அறிந்த வனச்சரகா் குமாா், வனவா் சந்தியா ஸ்ரீ மற்றும் வனத்துறையினா் சம்பவ இடம் சென்று உயிரிழந்த காட்டு எருமையை மிட்டனா்.
பின்னா், மாவட்ட வன அலுவலா் அருண்லால் உத்தரவின்படி, கால்நடை மருத்துவா் ராஜ்குமாரை வரவழைத்து காட்டு எருமையை பிரேத பரிசோதனைசெய்து வனப் பகுதியில் புதைத்தனா்.
விவசாயி ஏழுமலை மீது வனத் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.