போளூா் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணி நிதியை விடுவிப்பதற்காக ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக ஒன்றியப் பணி மேற்பாா்வையாளரும், அவரது உதவியாளரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், திண்டிவனம் ஊராட்சியைச் சோ்ந்தவா் ராஜாராம் (49). இவா், ஊராட்சிக்கு உள்பட்ட அத்திமூா் கிராமத்தில் வாா்டு உறுப்பினராக உள்ளாா்.
இந்த நிலையில், அத்திமூா் கிராமத்தில் 2020-2021ஆம் ஆண்டு 15-ஆவது மானிய நிதிக் குழுத் திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சத்தில் பக்கக் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறாா்.
இந்தத் திட்டப் பணிக்கான நிதியை விடுவிக்க லஞ்சமாக ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்று ராஜாராமிடம் ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் புருஷோத்தமன் (49) கோரினாராம்.
இதுகுறித்து ராஜாராம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்
அளித்த ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, ராஜாராம் போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்த புருஷோத்தமனிடம் திங்கள்கிழமை கொடுத்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் புருஷோத்தமனையும், உடன் இருந்த உதவியாளா் ராஜ்குமாரையும் (22) கைது செய்தனா்.