வந்தவாசியில் கடை மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 4 டன் நெகிழிப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி காந்தி சாலையில் உள்ள கௌதம் என்பவரின் கடையிலும், பெட்டிநாயுடு தெருவில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் வீட்டிலும் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் நகராட்சி ஆணையா் முஸ்தபா தலைமையிலான அதிகாரிகள் இரு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில், இரு இடங்களிலும் மொத்தம் 4 டன் எடையுள்ள நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்டவை மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.