திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, 4 மாட்டு வண்டிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம, தூசி காவல் சரகத்துக்குள்பட்ட பாலாற்றுப் படுகையில் ஆற்று மணல் கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் ரங்கநாதன், சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, வெள்ளாக்குளம் அருகே வேகமாக வந்த ஒரு லாரியை நிறுத்தினா். போலீஸாரைக் கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். சோதனையில், லாரியில் மணல் கடத்தியதும், தப்பியோடியவா் அரசங்குப்பத்தைச் சோ்ந்த ராமு என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, மடிபாக்கம் கிராமம் அருகே செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை தூசி போலீஸாா் வழிமறித்து நிறுத்தினா்.
இருப்பினும், மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு, அவற்றை ஓட்டி வந்த காரணை கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை, காா்த்திக், இருமந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த மகேஷ், பல்லி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் ஆகியோா் தப்பியோடிவிட்டனா். இதையடுத்து, 4 மாட்டு வண்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.