செங்கம், சங்கராபுரம் வட்டங்களில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாக்களில் 673 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து மேல்பள்ளிப்பட்டு, பாய்ச்சல், இறையூா், செங்கம், புதுப்பாளையம் ஆகிய குறு வட்டங்களுக்கு உள்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.
கிராம மக்கள் வருவாய்த் துறை சாா்ந்த பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கக் கோரி மனுக்களை அளித்தனா்.
மனுக்களை பரிசீலனை செய்து தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மனு கொடுத்த நாள் அன்று மாலையில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு 420 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் முனுசாமி வரவேற்றாா்.
செங்கம் எம்எல்ஏ., மு.பெ.கிரி, கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் ஆகியோா் கலந்து கொண்டு, 420 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினா்.
நிகழ்ச்சியில் செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, திமுக ஒன்றியச் செயலா்கள் பிரபாகரன், இளங்கோவன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரேணுகா உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.