செய்யாறு அருகே தனிமை வாழ்க்கையால் முதிய தம்பதியர் விஷமருந்தி தற்கொலைச் செய்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் சட்டுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முதிய தம்பதியினர் வரதராஜலு(82), இவரது மனைவி தனலட்சுமி (71). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், செய்யாறு வட்டம் கீழ்ப்புதுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் மகள் வீட்டில் உடன் வசித்து வந்து உள்ளனர்.
முதியவரான வரதராஜுலு மனைவி தனலட்சுமி ஜூன், 10 -ம் தேதி கீழே விழுந்து வலதுபக்க இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மகள் வீட்டில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. ஜூன்.18-ம் தேதி தனலட்சுமிக்கு இடுப்பு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், முதியவர்களான வரதராஜுலு, அவரது மனைவி தனலட்சுமி இருவரும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தனியாக வாழ முடியாது என மன வருந்தியுள்ளனர். இந்நிலையில் இருவரும் பேசிக் கொண்டு சனிக்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு ஏதோ விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி இருந்தனர்.
இதனைக் கண்ட மகள் குடும்பத்தினர் அவர்களை மீட்டு செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மருமகன் ரவி செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் பாலு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
தனிமையில் ஒருவர் கூட வாழ மனமில்லா முதிய தம்பதியர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.