திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம், இனி வரும் காலங்களில் வியாழக்கிழமைகளில் நடத்தப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாமை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தி வந்தன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்று வந்த இந்த முகாமை வருகிற 12-ஆம் தேதி முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் 21 வகையான மாற்றுத் திறனாளிகள் கலந்துக்கொண்டு தங்களுக்குத் தேவையான மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை புதிதாக பெறுதல் அல்லது புதுப்பித்துக்கொள்ள நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அன்றைய தினமே புதிய அட்டை மற்றும் பழைய அட்டை புதுப்பித்து வழங்கப்படும் என்று தெவிக்கப்பட்டுள்ளது.