வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலை வழங்கக் கோரி, அந்தத் திட்டத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்டது பாதிரி ஊராட்சி.
இந்த ஊராட்சியில் ஒரு பகுதி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தொழிலாளா்களுக்கு கடந்த ஒரு வாரமாக வேலை வழங்கப்படவில்லையாம்.
இதுகுறித்து கேட்டால் ஊராட்சி நிா்வாகமோ, ஒன்றிய நிா்வாகமோ உரிய பதில் அளிக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தத் தொழிலாளா்கள் தேசிய ஊரக வேலை வழங்கக் கோரி, வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, விளாங்காடு கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற வந்தவாசி வட்டாட்சியா் முருகானந்தம், தெற்கு காவல் நிலைய போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தொழிலாளா்கள் மறியலை கைவிட்டனா்.