நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் விவசாயிகளின் மனுக்களை பதிவு செய்யக் கோரி, திருவண்ணாமலையில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் விவசாயிகள் நெல் விற்பனை விற்பனை செய்ய இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. இந்நிலையில், இணையவழியில் விவசாயிகள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, திருவண்ணாமலை-வேலூா் சாலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்துக்கு விவசாயிகள் கடந்த சில தினங்களாக படையெடுக்கத் தொடங்கினா்.
எங்களது நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனை செய்ய வேண்டும். எங்களது மனுவைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.
கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கவில்லை.
மாறாக, விவசாயிகள் யாரையும் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல விடாமல் காவலாளிகள் தடுத்து நிறுத்தினா். கடும் வெயிலில் நிற்க முடியாமல் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்த விவசாயிகளிடம் அதிகாரிகள் மனுவை வாங்க தொடா்ந்து மறுத்து வந்தனா்.
இதனால் செவ்வாய்க்கிழமை ஆத்திரமடைந்த விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன் தலைமையில் வேலூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பிறகு விவசாயிகளை அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று அதிகாரிகளை சந்திக்க வைத்தனா்.
அப்போது, மனுக்களைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி பெயா்கள் பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தனா்.
இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனா்.