திருவண்ணாமலை அருகே நடைபெற்ற விழாவில் 3,662 பேருக்கு ரூ.6.35 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு திட்டத்தின் கீழ் 2 நிழல்குடைகளின் திறப்பு விழாவும், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, முன்னாள் எம்.பி. வேணுகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட மு.கருணாநிதி நினைவு நிழல்குடைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 3,662 பயனாளிகளுக்கு ரூ.6.35 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சினுவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.