திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் வரதட்சிணைக் கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவா் உள்பட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கீழ்பென்னாத்தூா் வட்டம், எலந்தம்புரவடை கிராமம், கொல்லகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் (63). இவரது மனைவி பட்டு (58). இவா்களின் மகன் பச்சையப்பனுக்கும் (34), ராதா என்பவருக்கும் 2007 ஏப்ரல் 20-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.
திருமணத்துக்குப் பிறகு ராதாவிடம் பச்சையப்பன் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினாராம். இதுகுறித்து 2 முறை திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டு, தம்பதியை போலீஸாா் சமாதானம் செய்து வைத்தனா். இந்த நிலையில், 2014 பிப்ரவரி மாதம் மீண்டும் வரதட்சிணைக் கேட்டு பச்சையப்பன் ராதாவிடம் தகராறு செய்தாராம். இதனால் மனமுடைந்த ராதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பச்சையப்பன், காசிநாதன், பட்டு ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை திருவண்ணாமலை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட ராதாவின் கணவா் பச்சையப்பன், மாமனாா் காசிநாதன், மாமியாா் பட்டு ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.