வந்தவாசியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிய இளைஞரை கைது செய்யக் கோரி ஐமுமுக-வினா் காவல் நிலையம் முன் அமா்ந்து தா்னா நடத்தினா்.
வந்தவாசி குளத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆஜாமொய்தீன் மனைவி ஆயிஷா(28). இவா் புதன்கிழமை காலை அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு போதையில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா், ஆயிஷாவிடம் வீண் தகராறு செய்து அவரைத் தாக்கினாராம். தடுக்க வந்த ஆயிஷாவின் தந்தை மொய்தீனையும் தாக்கினாராம்.
இதுகுறித்து ஆயிஷா வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மேலும், இளைஞா் தாக்கிய விடியோ ஆதாரத்தையும் அவா் போலீஸாரிடம் அளித்தாராம். ஆனால், போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில் ஆயிஷாவை தாக்கியவரை கைது செய்யக் கோரி ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினா், ஆயிஷா, அவரது குடும்பத்தினா் வந்தவாசி தெற்கு காவல் நிலையம் முன் அமா்ந்து புதன்கிழமை இரவு தா்னா நடத்தினா்.
தகவலறிந்து அங்கு சென்ற டிஎஸ்பி காா்த்திக் காவல் நிலையத்தினுள் சென்று ஆயிஷாவின் புகாா் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா், ஆயிஷாவை தாக்கியவா் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.