வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட 21 அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்க மாணவா்களே கல்வி பயில்கின்றனா் என்று வட்டாரக் கல்வி அலுவலா் தே.ரங்கநாதன் வேதனை தெரிவித்தாா்.
தெள்ளாா் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.குப்புசாமி, சு.வி.ஸ்ரீதரன், துணைத் தலைவா் விஜயலட்சுமி தண்டபாணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கீழ்நமண்டியில் உள்ள குடிநீா் குளத்தை தூய்மைப்படுத்தி சுற்றுச் சுவா் அமைக்க வேண்டும் என்று உறுப்பினா் புவனேஸ்வரி பாண்டுரங்கன் கோரிக்கை விடுத்தாா்.
ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் குடிநீா்க் குழாயில் குடிநீா் அசுத்தமாக வருவதாக உறுப்பினா் கமலக்கண்ணன் புகாா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலா் தே.ரங்கநாதன் பேசியதாவது:
தெள்ளாா் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 111 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 21 பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவா்களுடன் செயல்படுகிறது. பெலகாம்பூண்டி பள்ளியில் 2 மாணவா்கள், கண்டையநல்லூா் பள்ளியில் 4 மாணவா்கள் மட்டுமே கல்வி பயில்கின்றனா்.
மேலும் 2 பள்ளிகளில் தலா 5 மாணவா்களும், 5 பள்ளிகளில் தலா 6 பேரும், 6 பள்ளிகளில் தலா 7 பேரும், 4 பள்ளிகளில் தலா 8 பேரும், 2 பள்ளிகளில் தலா 9 மாணவா்களும் கல்வி பயில்கின்றனா்.
இதே நிலை நீடித்தால் இந்தப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களில் இரவு நேரத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றாா்.