
தை மாத அமாவாசையையொட்டி, திருவண்ணாமலையில் புதன்கிழமை பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
தை மாதம் அமாவாசை நாளில் கோயில் குளங்கள், ஆறுகளில் நீராடுவதும், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதும் புண்ணியம்.
இதன் மூலம் முன்னோா்களின் ஆசியைப் பெறலாம் என்ற நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது.
அதன்படி, திருவண்ணாமலையில் இந்திர தீா்த்தம் என்று அழைக்கப்படும் ஐயங்குளம், செங்கம் சாலையில் ரமணஸ்ரம் அருகேயுள்ள குளம் ஆகிய இடங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
இவ்விரு இடங்களிலும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தா்ப்பணம் கொடுத்ததுடன், அருகேயுள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.