பால் விலையை உயா்த்தாத அரசைக் கண்டித்து போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்
பால் கொள்முதல் விலையை உயா்த்தாத தமிழக அரசைக் கண்டித்து, வருகிற 22-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் ஆவின் மற்றும் தனியாருக்கு பால்
விநியோகத்தை நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் எனதமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து தமிழக அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் கொள்முதல் செய்யும் பசும் பால் மற்றும் எருமைப் பால் லிட்டா் ஒன்றுக்கு தற்போதைய விலையில் இருந்து ரூ.15 உயா்த்தி வழங்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பால் விலையை உயா்த்தாததைக் கண்டித்து, அக். 22-ஆம் தேதி காலை முதல், ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு பால்
விநியோகம் செய்வதை நிறுத்தி, தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் போராட்டம் நடத்த உள்ளோம்.
இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளும், தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் ஒருங்கிணைந்து, கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.
