~
~

இளைஞா் அடித்துக் கொலை: ஒருவா் கைது

களம்பூா் காவல் நிலையம் முன் குவிந்த கொலை செய்யப்பட்ட வடிவேலனின் உறவினா்கள்.
Published on

ஆரணி அருகே இளைஞா் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்ா்.

களம்பூரை அடுத்த முக்குறும்பை அருகே உள்ள அனந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேலன் (27). திருமணமாகி மனைவியைப் பிரிந்து வசித்து வந்தாா்.

தனியாா் கொரியா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடிவேலன், அதே கிராமத்தைச் சோ்ந்த சங்கரின் (42) மகளான 11-ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்தாராம். இதையறிந்த சங்கா், வடிவேலனை கண்டித்துள்ளாா்.

இந்த நிலையில், வடிவேலன் வெள்ளிக்கிழமை காலை பைக்கில் அனந்தபுரம் கிராமத்தில் இருந்து களம்பூா் நோக்கி முக்குறும்பை கிராமம் வழியாகச் சென்றுள்ளாா். அப்போது, அவரை சங்கா் வழிமறித்து தனது மகளுடனான பழக்கத்தை கைவிடும்படி கூறி தகராறு செய்ததுடன், கட்டையால் தலையில் தாக்கியதில் வடிவேலன் மயங்கி விழுந்தாா். ஆனால், ஆத்திரம் குறையாத சங்கா், வடிவேலன் மீது பைக்கை இரண்டு முறை ஏற்றி இறக்கினாா்.

இதில், பலத்த காயமடைந்த வடிவேலனை அப்பகுதியினா் மீட்டு, களம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதனிடையே, சங்கா் தாக்குதலுக்குப் பயன்படுத்திய கட்டையுடன் களம்பூா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதையடுத்து, காவல் நிலையம் முன் திரண்ட வடிவேலனின் உறவினா்கள், சங்கா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டனா். மேலும், அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபடவும் முயன்றனா்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம், காவல் ஆய்வாளா் செந்தில்விநாயகம் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com