கூடினோம், கலைந்தோம் என்றில்லாமல் மக்களுக்காகச் செயலாற்றுங்கள்!
By போளூர் | Published on : 29th July 2013 04:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மக்களுக்குப் பணியாற்றவே திமுக விரும்புகிறது. "கூடினோம், கலைந்தோம்' என்றில்லாமல், கூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துகளை மனதில் பதிய வைத்துக் கொண்டு மக்களுக்காகச் செயலாற்ற வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞர் அணியின் பயிற்சிப் பாசறைக் கூட்டம் போளூரை அடுத்த படைவீடு வீரக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்டாலின் மேலும் பேசியதாவது:
திமுகவுக்கு உள்ள வரலாறு வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது. ஹிந்தி எதிர்ப்பு, மொழிப்போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை திமுக சந்தித்துள்ளது.
முதன்முதலில் திமுக இளைஞரணி கோபாலபுரத்தில் உருவானது. படிப்படியாக வளர்ந்து 1980-ல் மதுரையில் மாநில அளவில் இளைஞரணியைத் தொடங்கிவைத்தார். இன்று திமுகவில் வலுப்பெற்ற அணியாக இளைஞரணி உள்ளது. இளைஞரணிக்கு 5 ஆயிரம் பேர் நிர்வாகிகளாக உள்ளனர்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாமல் போனாலும் நாட்டு மக்களுக்கு தொண்டு செய்யும் கட்சி திமுக.
மாற்றம் தந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அதிமுக ஆட்சி அளித்து வருகிறது. எனவே, திமுக இளைஞரணியினர் கொள்கை உணர்வோடு செயலாற்ற வேண்டும்.
இளைஞரணி சார்பில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் ஸ்டாலின்."திராவிட இயக்க வரலாறு' எனும் தலைப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும், "மொழிப்போர்' எனும் தலைப்பில் பேராசிரியர் சபாபதி மோகனும் பேசினர்.
திமுக மாவட்டச் செயலர் எ.வ.வேலு, தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.