வாணியம்பாடி அருகே மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
வாணியம்பாடியை அடுத்த சின்னவேப்பம்பட்டு கே.கே.கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி சரோஜா (70). இவரது மூத்த மகன் குமரேசனுக்கு சந்தோஷ், அருண் குமார் (30) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பாட்டி சரோஜாவின் நிலத்தில் வீடு கட்டியுள்ளனர்.
இந்நிலையில் புதியதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற சரோஜா, சந்தோஷுக்கு ஒப்புதல் கையெப்பம் அளித்தாராம். ஆனால், அருண்குமாருக்கு கையொப்பம் இட மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அருண்குமாருக்கும், சரோஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை காலை 10 மணியளவில் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார், மேட்டுக்கொல்லை வழியாக தனியாக நடந்து சென்று கொண்டிருந்த சரோஜாவை தடுத்து நிறுத்தி, மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி டி.எஸ்.பி. சுந்தரம், ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிறகு சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அருண்குமாரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.