வணிகர் நல வாரியத்தை தனித் துறையாக்கி சீரமைக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மண்டலத் தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விவரம்: வணிகர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட நல வாரியம் செயல்படாமல் முடங்கியுள்ளது. நல வாரியத்தை தனித் துறையாக்கி சீரமைத்து வணிகர்களுக்குத் தேவையான விபத்து காப்பீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், 60 வயதைக் கடந்தவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிப்புக் கூட்டு வரி சட்டத்தில் வணிகவரி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தேச வரிவிதிப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வரிவிதிப்பு ஆணைகளைப் பிறப்பித்ததால் ஆயிரக்கணக்கான வணிகர்களுக்கு மனஉளைச்சலும், இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, உத்தேச வரிவிதிப்பு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை குறித்து மத்திய அரசு வணிகர்களிடம் கலந்தாலோசனை செய்யாமலேயே ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. அச்சட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். ரூ. 50 லட்சம் வரையில் மொத்த விற்பனை செய்யும் வணிகர்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.